வணக்கம்.வாழ்க தமிழ்! வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது!

இன்றைய குறள்:-

Friday, August 28, 2009

தொல்காப்பிய உயிர்ப்பாகுபாடு - சரியா?


முன்னுரை:

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மரபியலில் காணப்படும் பாடல்கள் இவை:

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - பா.எண் - 27
புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -28
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -29
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -30
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் - 31
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண்- 32
மக்கள்தாமே ஆறறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -33
ஒருசார் விலங்கும் உள என மொழிப - பா.எண் - 34

தற்போதைய பொருள்:

மேற்காணும் எட்டு பாடல்களின் தற்போதைய கருத்துக்கள் ஆவன: தொட்டு அறிவன ஓரறிவு உயிர்களாகும். சான்று: புல்,மரம் போன்றவை. தொடுதலுடன் நாவினால் சுவையும் அறிபவை ஈரறிவு உயிர்களாகும். சான்று: நத்தை, இப்பி போன்றவை. தொடுகை மற்றும் சுவையுடன் மூக்கினால் மணமும் அறிபவை மூன்று அறிவுடையவை ஆகும். சான்று: கறையான், எறும்பு போன்றவை. தொடுகை,சுவை,மணத்துடன் கண்களினால் காட்சியும் அறிபவை நான்கு அறிவுடைய உயிர்கள் ஆகும். சான்று: நண்டு, தும்பி (தேனீ) போன்றவை. தொடுகை,சுவை,மணம், காட்சியுடன் காதினால் ஒலியும் அறிபவை ஐந்து அறிவுடையவை ஆகும். சான்று: விலங்குகள், மாக்கள் போன்றவை. இந்த ஐந்து அறிவுகளுடன் மனதினால் சிந்திக்கும் அறிவினைப் பெற்றவர்கள் மக்களும் அவர் போன்றோரும் ஆவர். ஒருவகை விலங்குகளும் ஆறறிவுடையன என்று கூறுவார்கள்.

பொருட்பிழைகள்:

மேற்காணும் எட்டு பாடல்களில் பல பொருட்பிழைகள் காணப்படுகின்றன. அவற்றைக் கீழே காணலாம்.


தும்பியாகிய தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று 31 ஆம் பாடல் கூறுகிறது. இக் கருத்து அறிவியல் உண்மைக்குப் புறம்பானது ஆகும். ஏனென்றால் தேனீக்குக் கண்கள் உண்டு; ஆனால் மூக்கு இல்லை. பூவிதழ்களின் ஒளியினால் கவரப்பட்டே இவை பூவில் அமர்ந்து தேன் உண்ணுகின்றனவே அன்றி பூக்களின் நறுமணத்தால் அல்ல. இது அறிவியல் உண்மை. இதனை மேட்சி என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம்.
அதேபோல் நண்டுகளுக்கும் மூக்கு என்பது இல்லை. நீர்வாழ் நண்டுகளானாலும் சரி நிலத்தில் வாழும் தென்னைமர நண்டுகளானாலும் சரி தனிப்பட்ட சுவாச உறுப்பான மூக்கு என்பதே இவற்றுக்குக் கிடையாது. இவை பற்றிய உண்மைகளை நீர்வாழ்நண்டுகள் மற்றும் தென்னைமர நண்டுகள் என்ற இணையதளப் பக்கங்களில் காணலாம். இதில் இருந்து தேனீ மற்றும் நண்டிற்கு நான்கறிவு என்னும் கருத்து தவறானது என்று அறியலாம்.

நத்தைக்கு மெய், வாய் என்ற இரண்டு அறிவுகள் மட்டுமே உண்டென்று 29 ஆம் பாடல் கூறுகிறது. இதுவும் தவறாகும். ஏனென்றால் நத்தைக்குக் கண்களும் உண்டு. இதை அனிமல்ஸ் என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம். எனவே நத்தைக்கு ஈரறிவு மட்டுமே என்று கூறுவது தவறு என்று தெளியலாம்.
எறும்பிற்கு மெய்,வாய்,மூக்கு என்று மூன்று அறிவுகள் உண்டு என்று 30 ஆம் பாடல் கூறுகிறது. இதுவும் அறிவியலுக்குப் புறம்பான கருத்தாகும். ஏனென்றால் எறும்பினங்களுக்கு மூக்கு இல்லை என்பதே அறிவியல் உண்மை. இந்த உண்மையினைப் பற்றி விளக்கமாக ஆன்ட்ஹில்வுட் என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம். இதில் இருந்து எறும்பிற்கு மூக்கு உண்டு என்று கூறுவது தவறு என்று அறியலாம்.

பரிணாம வளர்ச்சி ஆய்வுமுறைப்படி உயிர்களுக்கான மூன்றாவது அறிவு கண்ணே என்றும் மூக்கானது நான்காவது அறிவே என்றும் அறியலாம். இது எவ்வாறெனில் மணம் என்பது குறுகிய எல்லைக்குள் அறியப்படுவது. காட்சி என்பது நீண்ட எல்லையிலும் அறியப்படுவது. உணவைத் தேடுகின்ற உயிர்களுக்கு உணவுப் பொருளின் இருப்பிடம் அறிதலே முதல்நிலைத் தேவை ஆகும். உணவுப் பொருளின் மணம் அறிதல் என்பது இரண்டாம் நிலைத் தேவையே ஆகும். எனவே முதல்நிலைத் தேவையை நிறைவேற்றும் விதமாக கண்களை மூன்றாவது அறிவாக உயிர்களுக்கு அளித்தது இயற்கை. இரண்டாம்நிலைத் தேவையை நிறைவேற்றும் விதமாக மூக்கினை நான்காவது அறிவாக அளித்தது இயற்கை. ஆனால் 27 ஆம் பாடலோ மூன்றாவது அறிவு மூக்கு என்றும் நான்காவது அறிவு கண் என்றும் கூறுகிறது. இப் பாடலின்படி கண்கள் உடைய உயிர்களுக்கு எல்லாம் மூக்கு இருக்க வேண்டும். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை என்று மேலே நத்தை, எறும்பு, நண்டு போன்ற உயிர்களுக்குக் கண்டோம். மாறாக மூக்குடைய உயிர்களுக்கு எல்லாம் (சான்று: விலங்குகள், பறவைகள்) கண்களும் உண்டு என்ற உண்மையை நாம் அறிவோம். இதில் இருந்து கண்களுக்குப் பின்னரே மூக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என அறியலாம். இயற்கையின் இந்த விதிக்கு மாறாக 27 ஆம் பாடலின் கருத்து அமைவதால் அக் கருத்து தவறு என்று தெள்ளிதின் அறியலாம்.

விலங்குகளும் மாக்களும் (விலங்கொத்த மனிதர்களும்) ஐந்து அறிவினர் என்று 32 ஆம் பாடல் கூறுகிறது. இந்த விலங்கொத்த மனிதர்கள் என்போர் யாவர் என்பதற்கு மனித உருவில் விலங்கின் குணமுடையோர் என்று பொருள் கொள்கின்றனர். இது அடிப்படையில் தவறாகும். ஏனென்றால் இங்கு உயிர்களின் புலன்களைப் பற்றித் தான் பேசப்படுகிறதே ஒழிய தீய அல்லது நல்ல குணங்கள் அன்று. அவ்வகையில் மனிதர்களுக்கு அவர்கள் (நல்லோராயினும் தீயோராயினும்) மெய்,வாய்,கண்.மூக்கு.காது,மனம் என்ற ஆறறிவு உண்டு தானே. எனவே ஆறறிவு உடைய மனிதர்களை (அவர் இழிகுணத்தோர் ஆயினும்) ஐயறிவில் சேர்த்துக் கூறுவது தவறாகும்.

மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக 33 ஆம் பாடல் கூறுகிறது. ஒருவகை விலங்குகளுக்கும் மனம் இருப்பதாக 34 ஆம் பாடல் கூறுகிறது. இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே ஆகும். ஒவ்வொரு உயிரும் அதனதன் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சிந்திக்கிறது; அதற்கேற்ப செயல்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவது மூளை ஆகும். மூளை இல்லாத உயிர்கள் உண்டா?. இருக்க முடியாது. ஏனென்றால் மூளை இல்லாமல் உயிர்களால் வாழவே முடியாது. நமது மூளையைப் போல இல்லாவிட்டாலும் மூளையானது ஏதேனும் ஒரு வடிவத்தில் வண்ணத்தில் அனைத்து உயிர்களுக்கும் எங்காவது இருந்தே ஆகவேண்டும். மூளை இல்லையேல் சிந்தனையும் இல்லை; இயக்கமும் இல்லை. எங்குமே நகராமல் நின்று கொண்டே இருக்கும் மரம் செடி கொடிகளுக்கும் கூட மூளை உண்டு. அதனால் தான் அவற்றால் அவற்றின் சூழலுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இவை அனைத்தும் அறிவியல் உண்மைகள். (அருகில் இருக்கும் மரங்களைப் பாருங்கள். தம் கரங்களை நீட்டி 'வருக வருக' என்று அவை நம்மை வரவேற்பது போலத் தோன்றவில்லை?.) அவ்வாறு இருக்க மனிதர்களுக்கும் ஒருவகை விலங்குகளுக்கு மட்டுமே மனம் அல்லது மூளை உண்டு என்று கூறி இருப்பது தவறாகும்.

பிற குற்றங்கள்:

மேற்காணும் எட்டு பாடல்களிலும் ஒரு பாடலில் கூட பறவை இனத்தைப் பற்றிக் கூறவே இல்லை. ஏன்? பறவை இனத்திற்கு ஒரு அறிவு கூட இல்லையா என்ன?. மரம்,செடி,கொடி,விலங்குகள் ஏன் சிறுசிறு உயிர்களுக்கும் கூட இத்தனை அறிவு என்று கூறிவிட்டு பறவைகள் என்ற ஒரு மிகப் பெரிய இனத்தைப் பற்றி நேரிடையாகவோ உய்த்துணரும் படியாகவோ கூட குறிப்பிடாதது இப் பாடல்களில் உள்ள மிகப் பெரிய குறைபாடு ஆகும். இது தெளிவின்மைக் குற்றமாகும்.

மேற்காணும் எட்டு பாடல்களும் மரபியலில் வைக்கப்பட்டுள்ளது. மரபியலின் முதல் 26 பாடல்கள் உயிர்களின் இளமைப் பெயர்கள் எவ்வாறு வழங்கப் படவேண்டும் என்று விரித்துக் கூறுகிறது. திடீரென 27 முதல் 34 வரையில் உள்ள பாடல்கள் அதாவது மேற்காணும் 8 பாடல்கள் உயிர்களின் அறிவுகளைப் பற்றிக் கூறுகிறது. மீண்டும் 35 ஆம பாடலில் இருந்து உயிர்களின் இளமைப் பெயர் வழங்கும் முறை தொடர்கிறது. உயிர்களின் இளமைப் பெயர் வழங்கும் முறை பற்றிக் கூறும்போது இடையில் தொடர்பே இல்லாமல் உயிர்களின் அறிவு பற்றிக் கூறவேண்டிய தேவை என்ன?. 24 ஆம் பாடலில் ஓர் அறிவு உயிர் என்ற தொடர் வருகிறது. அதனால் தான் உயிர்களின் அறிவுப் பாகுபாடு பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது என்று சிலர் கருதலாம். ஆனால் அது தவறாகும். ஏனென்றால் அத் தொடருக்கான விளக்கத்தை 25 ஆம் பாடலின் மூலமே உய்த்துணர வைத்துவிட்டார் தொல்காப்பியர். 'நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே' என்று 25 ஆம் பாடலில் கூறியதில் இருந்து ஓர் அறிவு உயிர் என்பது நெல்,புல் போன்ற அசைவற்ற தன்மை உடைய உயிர்கள் என்னும் கருத்து உய்த்துணரப் படுகிறது. எனவே உயிர்களின் அறிவுப் பாகுபாடு பற்றிய விளக்கம் இங்கே தேவையின்றியே வந்துள்ளது என்று தெளியலாம். ஆக பொருத்தமில்லாத இடத்தில் இந்த எட்டு பாடல்களும் அமைந்திருப்பது அமைப்புக் குற்றமாகும்.

துணிபு:

தொல்காப்பியரின் நுண்மாண் நுழைபுலம் பற்றி ஏற்கெனவே நாம் 'மாயோன் மேய' என்னும் கட்டுரையில் கண்டிருக்கிறோம். தெளிவான சிந்தனை, நுட்பமான அறிவு, எளிமையான நடை ஆகியவை இவரது சிறப்பு இயல்புகள் ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, மேற்காணும் எட்டு பாடல்களை இவ்வளவு பொருட்பிழைகளுடனும் தெளிவின்மை மற்றும் அமைப்புக் குற்றங்களுடனும் அவர் தொல்காப்பியத்தில் இயற்றி இருப்பாரா? என்பதே கேள்வி. ஒருபோதும் இருக்க முடியாது என்பதே அதற்கான விடை ஆகும். என்றால் இப் பாடல்களை யார் இயற்றி இருப்பர்? இக் கேள்விக்கான விடை:

உயிர்ப்பாகுபாடு குறித்த இப் பாடல்கள் எட்டும் இடைச்செருகல் (அ) பிற்சேர்க்கையே ஆகும். அதாவது தொல்காப்பியர் அல்லாத வேறொருவரால் தொல்காப்பியருக்குப் பின் இயற்றப்பட்டு தொல்காப்பியத்தில் வேண்டுமென்றே புகுத்தப்பட்டவை. இதுவே இக் கட்டுரையின் துணிந்த முடிபாகும்.

Tuesday, August 25, 2009

ஆத்துல ஒரு கால்


பழமொழி:
ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.

தற்போதைய கருத்து:
ஆற்றுநீரில் ஒருகாலையும் சேற்றுமண்ணில் ஒருகாலையும் வைப்பதைப் போல.

தவறு:
இப் பழமொழியின் பயன்பாட்டில் தவறேதும் இல்லை அதாவது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் கவனம் வைத்தால் ஒரு செயலைக் கூட உருப்படியாய் செய்துமுடிக்க இயலாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இப் பழமொழிக்குக் கூறப்படும் பொருள்விளக்கம் அதாவது ஆற்றுநீரில் ஒருகால் சேற்றுமண்ணில் ஒருகால் என்பதுதான் தவறாகும். இது எவ்வாறு தவறாகும் என்று காண்போம். நம்மில் பலருக்கு ஆற்றைப் பற்றியும் குளத்தைப் பற்றியும் தெரியும். ஆற்றுநீரானது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இயல்பினது என்பதால் ஆற்றங்கரையில் மணல் நிறைந்து இருக்கும். இதற்கு மாறாக குளத்து நீரானது தேங்கி நிற்கும் இயலபினது. ஆகையால் குளத்தங்கரையில் தான் சேறு நிறைந்து இருக்கும். ஆற்றங்கரையில் சேறு இல்லை எனும்போது ஆற்றுநீரில் தனது ஒருகாலை வைத்த ஒருவன் இன்னொருகாலை சேற்றுமண்ணில் எப்படி வைக்க முடியும்?. ஒருபோதும் முடியாது அல்லவா?. இப்படி நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கருத்தை உணர்த்துவதால் இப் பழமொழிக்குக் கூறப்பட்ட மேற்காணும் பொருள்விளக்கம் தவறு என்பதை அறியலாம்.

மேற்காணும் பொருள்விளக்கத்தில் தவறு நேர்ந்ததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது 'ஆத்துல' மற்றும் 'சேத்துல' ஆகிய கொச்சைச்சொற்களே என்று புலப்பட்டது. ஆத்துல என்ற கொச்சைச்சொல் ஆற்றுநீரைக் குறிப்பதாகவும் சேத்துல எனும் கொச்சைச்சொல் சேற்றுமண்ணைக் குறிப்பதாகவும் புரிந்து கொண்டதே தவறான பொருள்விளக்கத்திற்கு அடிகோலி இருக்கிறது. இனி இவற்றின் சரியான பொருட்கள் என்ன என்று பார்ப்போம்.

திருத்தம்:
ஆத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அயத்தில் என்பதாகும். அயம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச்சொல் குதிரையைக் குறிக்கும். சேத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் செயத்தில் என்பதாகும். செயம் என்ற சொல் இங்கு பூமி அல்லது நிலத்தைக் குறிக்கும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:
கற்றறிந்த மக்களின் வாய்வழக்காக மட்டும் முதலில் இருந்தவந்த பழமொழிகள் காலப்போக்கில் கல்லாத பாமர மக்களின் வாயில் நுழைந்தபோது பலவிதமான மாற்றங்களை அடைந்தன. அவற்றுள் ஒன்றே கொச்சை மாற்றம் ஆகும். அகத்தில் என்னும் தூயதமிழ்ச் சொல் கொச்சையாக ஆத்துல என்று எவ்வாறு வழங்கப்பெறும் என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இப் பழமொழியில் வரும் அயத்தில் மற்றும் செயத்தில் ஆகிய தூய தமிழ்ச் சொற்கள் எவ்வாறு திரியும் என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.

அயம் (நீரைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ---> ஆம் (நீரைக் குறிக்கும் திரிபு வடிவம்)
மயல் (மயக்கத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ----> மால் (மயக்கத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)
பெயர் (தூய தமிழ்வடிவம்) ----> பேர் (திரிபு வடிவம்)
வெயர்வு (சினத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) --> வேர்வு (சினத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)

மேற்கண்ட சான்றுகளில் இருந்து மொழிமுதலாய் வரும் குற்றெழுத்துக்கள் திரிபின்போது யகரத்தை இழந்து நெடிலாக மாற்றமடையும் என்று அறியலாம். இவ் இலக்கணப் படியே

அயத்தில் --> ஆத்தில் ---> ஆத்துல என்றும்
செயத்தில் --> சேத்தில் --> சேத்துல என்றும்

கொச்சை வழக்கில் மாற்றமடையும் என்பதை அறியலாம்.

அயம் என்பதற்கு குதிரை என்ற பொருள் அகராதிகளில் காணப்படுகிறது. இதனால் தான் குதிரையில் ஏறிவரும் சாமியை அய்யனார் என்கிறோம். செயம் என்ற சொல்லுக்கு வெற்றி என்ற பொருள் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வெற்றி என்பது இரண்டாம் நிலைப் பொருள் ஆகும். பூமி என்பதே முதல்நிலைப் பொருள் ஆகும். ஏனென்றால் போருக்குச் செல்லும் மன்னனின் முதல் நோக்கம் எதிரி நாட்டு மன்னனின் பூமியைக் கைப்பற்றுவதே ஆகும். பூமியைக் கைப்பற்றினாலே வெற்றி பெற்றுவிட்டதாகவே பொருள் கொள்ளப்படும்.

ஒரு சான்றாக செயம்கொண்டான் என்னும் பெயரை எடுத்துக் கொள்வோம். இப் பெயரின் பொருளை வெற்றிகொண்டான் என்று விரிப்பதைவிட பூமிகொண்டான் என்று விரிப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வெற்றியை உடையவன் என்பதைவிட பரந்த பூமியை உடையவன் என்பதே மன்னருக்குச் (முதலாம் இராசராச சோழன்) சிறப்பு தரும் பெயராகும். செயம் என்னும் சொல் முதல்நிலையில் பூமியைத் தான் குறிக்கும் என்பதற்கு மேலும் சில ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செய் என்னும் சொல்லுக்கு விளைநிலம் என்று அகராதிகள் பொருள்கூறுகின்றன. இது செயம் என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இதிலிருந்து செயம் என்பது நிலப்பொருளையே குறிக்கும் என்பதை அறியலாம்.செய்யாள்,செய்யவள்,செய்யோள் என்ற சொற்களுக்கு இலக்குமி என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பூமியே அனைத்து செல்வங்களின் இருப்பிடம் என்பதால் பூமித்தாயே இலக்குமி ஆவாள். செய்யாள் என்பது செய்யை உடையவள் என்று விரிந்து பூமித்தாயைக் குறிப்பதால் இங்கும் செய் என்பது நிலத்தையே குறிக்கிறது என்று அறியலாம். இனி இப் பழமொழி உணர்த்தும் கருத்தினை ஒரு சிறுகதையுடன் காணலாம்.

குதிரை ஏற்றம் பயில விரும்பினான் ஒருவன். ஆனால் அவனுக்குக் குதிரை மீது ஏறவே பயம் எங்கே குதிரை அவனை மேலிருந்து கீழே தள்ளிவிடுமோ என்று. ஆனால் அவனுக்கோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது குதிரையின் மீதும் ஏறவேண்டும்; அதேசமயம் குதிரையும் அவனைத் தள்ளிவிடக்கூடாது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான். வலதுகாலைத் தூக்கி குதிரையின் மேலே போட்டுவிட்டு இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டான். இப்படிச் செய்தால் பாதுகாப்பாகக் குதிரைப்பயணம் செய்யலாம் என்ற நினைப்பு அவனுக்கு. இப்போது குதிரையைப் பின்னால் இருந்து உசுப்பினான். உடனே குதிரை பாய்ந்து ஓடத் துவங்கியது. இதனால் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது " குதிரைமேல் ஒருகாலையும் தரையில் ஒருகாலையும் வைத்துக் கொண்டால்" குதிரைப் பயணமும் செய்ய முடியாது; நடக்கவும் முடியாது என்று. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு செயல்களில் கவனத்தை வைத்தால் ஒரு செயலும் உருப்படியாய் நடக்காது. இதுவே இப் பழமொழி உணர்த்தவரும் உண்மையான கருத்தாகும்.

சரியான பழமொழி:
அயத்தில்
ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.

Friday, August 21, 2009

ஆத்துல போட்டாலும்


பழமொழி:
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

தற்போதைய பொருள்:
தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவரும் பல தமிழ்நாட்டுப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'ஆற்றில்' என்னும் தூயதமிழ்ச்சொல்லே 'ஆத்துல' என்று கொச்சைவழக்கில் மருவியதாகப் புரிந்துகொண்டு 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்' என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு 'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்' என்று பொருள் கூறுகின்றனர்.

தவறு:
மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. முதலில் ஆற்றுநீரில் போடுவதைப் பற்றிப் பார்ப்போம். இக் கருத்து அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல. ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று நாம் அறிவோம். எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப் பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.

திருத்தம்:
இப் பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:
புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப் பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும். தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.

மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனை உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. வள்ளுவர் ஒருபடி மேலேபோய் அறிவினை ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று 421 ஆம் குறளில் அவர் குறிப்பிடுவதில் இருந்து நல்ல தெளிவான அறிவினை ஆயுதமாகக் கொண்டு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்று அறியலாம். இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.

அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் 'அகத்தில் போட்டாலும்' என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது 'எளிதான செயல்தானே' என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.


'நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே' என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி.



இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல

சரியான பழமொழி:


அகத்தில் போட்டாலும் றிந்து போடவேண்டும்.

Wednesday, August 19, 2009

பூமி என்னும் தாய்


பாடல்:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
- குறள் எண்: ௨௪௫


தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.
மு.வ உரை: அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
சாலமன் பாப்பையா உரை: அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

தவறு:

மேற்காணும் மூன்று உரைகளும் தவறானவை ஆகும். ஏனென்றால் இக் குறளின் மூலம் வள்ளுவர் கூறவரும் கருத்து இதுவல்ல. அருளுடையவர்க்குத் தீவினை அதாவது துன்பம் இல்லை என்று 244 ஆம் குறளில் கூறிய வள்ளுவர் அதே கருத்தை இக் குறளிலும் கூறுவாரா?. அவ்வாறு கூறினால் அது கூறியது கூறல் என்னும் குற்றமாகி விடும். வள்ளுவர் போன்ற பெருந்தகையாளர்கள் அக் குற்றத்தை ஒருபோதும் செய்யமாட்டார்கள். எனவே இக் குறளில் துன்பம் என்ற பொருளையே வள்ளுவர் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. என்றால் இந்தத் தவறான கருத்துரைகளுக்குக் காரணம் என்ன?. அல்லல் என்ற சொல்லுக்குத் துன்பம் என்று பொருள் கொண்டதே ஆகும். இப் பொருள் இக் குறளுக்குப் பொருந்தாது.

அதுமட்டுமின்றி இந்த உரைகளில் காணப்படும் காற்று என்ற பொருள் இங்கு தேவையின்றி வந்துள்ளது. வெறுமனே உலகம் என்று சொல்லாமல் காற்று இயங்குகின்ற உலகம் என்று வள்ளுவர் ஏன் கூறவேண்டும்?. பூமிக்கு வரும் துன்பங்களை எல்லாம் காற்று மண்டலம் தடுத்து பூமியைக் காப்பாற்றி விடும் என்ற கருத்திலா?. உறுதியாக இல்லை. ஏனென்றால் பிற அண்டவெளிப் பொருட்களால் பூமிக்கு நேர்கின்ற துன்பங்களை எல்லாம் காற்று மண்டலத்தால் தடுத்துவிட முடியாது. இந்த அறிவியல் உண்மையினை தகைசான்ற வள்ளுவரும் அறிவார். எனவே காற்று எனும் பொருள் இக் கருத்தினைக் குறிக்க வரவில்லை என்பது தெளிவாகிறது. காற்று எனும் பொருளை வள்ளுவர் இங்கு பயன்படுத்தியதன் நோக்கங்கள் எவையும் தெளிவாகவும் பொருத்தமாகவும் இல்லை என்பதால் அப்பொருளை வள்ளுவர் இக் குறளில் பயன்படுத்தி இருக்கவே மாட்டார் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து காற்று என்னும் பொருளைக் குறிக்கும் வளி என்ற சொல்லில் தான் ஏதோ பிழை உள்ளது என்னும் கருத்தைப் பெறலாம். இனி இவற்றிற்கான திருத்தங்களைக் காணலாம்.

திருத்தம்:

அல்லல் என்னும் சொல் இக்குறளில் வறுமைப் பொருளில் வந்துள்ளது. வறுமையும் ஒருவகைத் துன்பமே என்பதாலும் எதுகை அழகிற்காகவும் அல்லல் என்னும் சொல்லை வறுமைப் பொருளில் இங்கு வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். வளி என்னும் சொல்லுக்குப் பதிலாக வரி என்ற சொல் வந்திருக்க வேண்டும். வரி என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இச் சொல் இக் குறளில் கடலைக் குறிக்கும். வரிவழங்கும் மல்லல் என்பது கடல் தருகின்ற பெருவளமாகிய மழையினைக் குறிக்கும். இவையே இக் குறளில் வரும் திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:

அருளுடைமைக்குச் சிறந்த சான்றுகாட்ட விரும்பிய வள்ளுவர் இக் குறளில் நமது பூமியையே சான்றாகக் காட்டுகிறார். ஆம், நமது பூமித்தாயினைவிட அருளில் சிறந்தவள் யார் இருக்கமுடியும்?. அண்டவெளியில் விழுந்து தொலைந்து போகாமல் தன்னோடு ஈர்த்துவைத்துக் கொண்டு ஒரு தாயைப்போல நம்மையெல்லாம் சுமந்து கொண்டிருக்கின்றது பூமி. இப் பூமியை நமது தேவைக்காகப் பங்குபோட்டுக் கொண்டு வெட்டுகிறோம்; குத்துகிறோம்; குடைகிறோம்; வெடிவைத்துத் தகர்க்கிறோம். இத் துன்பங்களுக்காக நம்மீது சினம்கொள்ளாமல் பொறுமையாக இருப்பதுடன் நமக்காக நல்ல பல வளங்களையும் தந்து காப்பதால்தான் பூமியை அருளில் சிறந்தவள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

சரி, பூமித்தாயை வள்ளுவர் ஏன் இக்குறளில் சான்றாகக் கூறுகிறார் அதாவது இச் சான்றின் மூலம் வள்ளுவர் உணர்த்த வரும் கருத்து என்ன என்று காணலாம். அருள் என்னும் உயரிய பண்பு ஒரு குலப்பண்பு ஆகும். பிறரது துன்பத்தைத் தனது துன்பமாக நினைத்து உதவுதலும் யாருக்கும் துன்பமே விளைவிக்காமல் வாழ்தலும் அருளுடையோரின் அடையாளங்கள் ஆகும். அருட்குடியில் பிறந்த மக்கள் பிறருக்கு உதவிசெய்து வாழவேண்டும் என்பதே அவர்களுக்கான விதி. ஆனால் இப்படி வாழ்வதால் தமது பெருஞ்செல்வத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி வாடவேண்டுமோ என்று அஞ்சி பலர் உதவிசெய்யத் தயக்கம் காட்டுவதுண்டு. இவர்களது தயக்கத்தினைக் களையவே இக் குறளை இயற்றியுள்ளார் வள்ளுவர்.


பிறருக்கு உதவிசெய்து வாழ்வதால் வறுமைநிலை உண்டாகாது; வளமான நிலையே உருவாகும். இக் கூற்றுக்குச் சான்றாகத் தான் கடல் உடுத்த பூமியைக் காட்டுகிறார் வள்ளுவர்.




பூமி உயிர்களிடத்தில் காட்டும் அருளே மழை ஆகும். உப்புநீராகிய கடல்நீர் ஆவியாகி மேகமாகி நன்னீராக மீண்டும் பூமிக்கே பொழிகிறது. இதனால் பூமியின் மொத்த நீர்வளம் குறைவதில்லை; மாறாக கூடவே செய்கிறது. இதற்குச் சான்றாக பூமியில் அடிக்கடி உண்டாகும் வெள்ளப் பெருக்குகள் மற்றும் கடல் கொந்தளிப்புக்களைக் கூறலாம். பிறரது துன்பம் கண்டு அருள்செய்வோரிடத்தில் மழைநீர்ப் பெருக்கைப் போல எதிர்பாராத பலவழிகளில் செல்வம் பெருகும். இதனால் அருளுடையோருக்கு வறுமை என்பதே இல்லை. கடல் வழங்குகின்ற பெருவளமாகிய மழையினை உடைய இந்த பெரும்பூமியே இதற்குச் சிறந்த சான்றாகும் என்கிறார் வள்ளுவர். இதுவே இக் குறளின் சரியான பொருள்விளக்கம் ஆகும். பூமியின் அருட்செல்வமாகிய மழையினை மாந்தரின் பொருட்செல்வத்துடன் ஒப்பிட்டு இக் குறளை இயற்றிய வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத் தக்கது அல்லவா?.

சரியான பாடல்:

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வரிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

Friday, July 10, 2009

புகழொடு தோன்றுக


பாடல்:

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
- குறள் எண்: 236

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும். இயலாதவர்கள் அத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
மு.வ.உரை: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்றவேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர்கள் அங்கு தோன்றுவதைவிட தோன்றாமல் இருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர்கள் உலகு காண காட்சி தருவதிலும் தராமல் இருப்பதே நல்லது. (நன்றி: திருக்குறள்.காம்)

தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலும் ஒரு பொருட்பிழை மட்டுமே உள்ளது. கலைஞர் உரையில் ஒரு துறையில் ஈடுபடுபவர்கள் புகழுடன் விளங்க முடியாவிட்டால் அத்துறையில் இருந்து பின்வாங்கிவிட வேண்டும் என்ற பொருள் தொனிக்கிறது. இது நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தாகும். ஏனென்றால் ஒரு துறையில் ஈடுபட்டு உள்ள அத்தனை பேருமே புகழ்பெற்று விளங்குவதென்பது சாத்தியமல்ல. வசதியும் வாய்ப்பும் இருந்தால் அவரவர் திறமைக்கேற்ப புகழ் பெறுவர். புகழ்பெற இயலாதவர்கள் பின்வாங்கவேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தே என்பது தெளிவு. அடுத்து மு.வ. உரையும் ஏறத்தாழ கலைஞர் உரையுடன் ஒத்துப் போவதால் இதுவும் நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து என்பது உறுதியாகிறது.

சாலமன் பாப்பையாவின் உரையில் புகழ் பெற்றவர்கள் மட்டுமே மேடையில் தோன்றவேண்டும் என்றும் புகழ் இல்லாதவர்கள் மேடையில் தோன்றவே கூடாது என்ற கருத்து தொனிக்கிறது. இது ஏற்கத்தக்க கருத்தே அல்ல. ஏனென்றால் மேடையில் அறிமுகம் ஆகும் அனைவரும் புகழ் பெற்றவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது. புகழ் இல்லாத புதியவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்திக் காட்டி புகழ் பெறவேண்டி இன்று மேடையிலே தோன்றி செயலாற்றக் காண்கிறோம். இப் புதியவர்களுக்குத் தடை விதித்தால் அது ஒரு சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போலன்றோ?. இப்படி ஒரு கருத்தை வள்ளுவர் கூறி இருப்பாரா?. ஒருபோதும் கூறி இருக்க மாட்டார். எனவே சா.பா.உரையும் தவறானது என்று தெளியலாம். இப்படி மூன்று உரைகளும் தவறாகிப் போனதற்குக் காரணம் 'புகழ்' என்ற சொல்லிற்கு 'பெருமை' என்ற பொருள் கொண்டது தான். இப் பொருள் இவ்விடத்தில் இச்சொல்லுக்குப் பொருந்தாது.

திருத்தம்:

இக்குறளில் வரும் 'புகழ்' என்னும் சொல்லுக்கு 'நெஞ்சின் ஈரம் அதாவது இரக்கம்' என்று பொருள் கொள்வதே இங்கு திருத்தமாகும். இது எவ்வாறு சரி என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

புகழ் என்னும் சொல்லுக்கு 'பெருமை அல்லது சிறப்பு' என்ற பொருளே நடைமுறையில் உள்ளது. 'புகழ் பாடுதல்' என்பது 'அனைத்து பெருமைகளையும் விரித்துக் கூறுதல்' என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆனால் இந்த 'பெருமை' எனும் பொருள் விரிவாக்க முறையில் இரண்டாம் நிலையில் பெறப்பட்ட ஒன்றே ஆகும். இச் சொல் உணர்த்தும் முதல் நிலைப் பொருள் 'இரக்கம்' என்பதே ஆகும். இதனை நிரூபிக்க திருக்குறளில் வரும் புகழ் என்னும் அதிகாரத்தில் உள்ள ஏனை ஒன்பது பாடல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - 'ஈவும் இரக்கமும் அன்றி உயிர்களுக்கான நற்பேறு வேறில்லை' என்பதே இக்குறளின் பொருளாகும். இக் குறளில் வரும் ஈதல் என்பது ஈவினையும் (ஈகை) இசைபட வாழ்தல் என்பது இரக்கத்துடன் வாழ்தலையும் குறிக்கிறது. 'ஈவு இரக்கம்' என்ற தற்கால அடுக்குமொழியும் இக் கருத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் கவனிக்கவும். இதற்கு முந்தைய அதிகாரத்தில் ஈகை பற்றிக் கூறிய வள்ளுவர் இந்த அதிகாரத்தின் முதல் குறளில் முதல் சொல்லாக ஈகையைப் பற்றியும் அதையடுத்து இரக்கத்தையும் குறிப்பிடுகிறார். ஏனென்றால் ஈகையும் இரக்கமும் வேறுவேறு ஆகும். ஈகை என்பது பொருட்கொடையைக் குறிக்க இரக்கம் என்பது பிற உயிரின் துன்பத்தைக் கண்டு மனம் பொறாமல் முன்சென்று உதவுதலைக் குறிக்கும். பொருட்கொடை அளிப்பதால் ஒருவர் பெருமை அடைவார் என்பது உண்மையே ஆனாலும் வள்ளுவர் கூற வரும் கருத்து அதுவல்ல; பொருட்கொடையுடன் நிற்காமல் துன்பப்படும் உயிர்களிடத்தில் இரக்கம் காட்டி உதவுங்கள் என்று கூறுகிறார். ஏனென்றால் பொருள்வளம் உள்ள செல்வந்தர்கள் மட்டுமே பொருட்கொடை அளிக்க இயலும். ஆனால் பிற உயிர்களிடத்து இரக்கம் காட்டி உதவுவதற்கு பொருள்வளம் தேவையில்லை. பொருட்கொடை நன்றே; அது முடியாதவர்கள் இரக்கமாவது காட்டுங்கள் என்று வலியுறுத்துகிறார். இக்குறளில் வரும் இசை என்னும் சொல் இரக்கம் என்னும் பொருளிலேயே வந்திருப்பதை அறியலாம்.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் - 'போற்றுவோர் போற்றுவதெல்லாம் தன்னிடம் இரந்தவரின் மேல் இரக்கம் கொண்டு பொருள் அளிப்போரின் உள்ளத்தில் மேலாடி நிற்கும் இரக்கப் பண்பே ஆகும்' என்பதே இக் குறளின் பொருள் ஆகும். இங்கும் புகழ் என்னும் சொல் பெருமையைக் குறிக்காமல் இரக்கத்தையே குறிக்கும். இது எவ்வாறு என்று காணலாம். உள்ளத்தில் இரக்க உணர்வுடன் பொருள் தருவதே உண்மையான பொருட்கொடை ஆகும். இரக்கமே இல்லாமல் நான்குபேர் பாராட்டவேண்டும் என்ற வறட்டு எண்ணத்திலோ கைம்மாறாக எதையாவது பெற்றுக்கொண்டோ பொருட்கொடை செய்வது தவறு ஆகும். இவ்வாறு பெறப்படும் பெருமை நிலையற்றது என்பதுடன் பெருமைக்குப் பதிலாக சிறுமையினையே இறுதியில் ஈட்டித் தரும். இரப்போரின் நிலைகண்டு மனமிரங்கி கைம்மாறு கருதாமல் பொருள் அளிப்போரின் உயர்வே நிலையானது. போற்றிப் பாடும் புலவர்களும் இவர்களையே போற்றுவர். இப் பாடல்கள் யாவும் ஈந்தோரின் இரக்கப் பண்பினையே பலவாறாகக் கூறி நிற்கும். சங்க கால ஆற்றுப்படை நூல்கள் இதற்கு நல்ல சான்றாகும்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் - 'ஒற்றுமை இல்லாத இந்த உலகத்தில் இரக்கத்தைத் தவிர அழியாமல் இருப்பது வேறில்லை' என்பதே இதன் பொருளாகும். இந்த உலகம் கருத்து வேறுபாடுகள் நிறைந்தது. இந்த வேறுபாடுகளால் மக்கள் தமக்குள் பிளவு பட்டுள்ளனர். இது நாளடைவில் போருக்கு வழிவகுத்து உயிரினத்தின் அழிவுக்கும் அடிகோலும். அது மட்டுமின்றி ஊழிக்காலத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு உயிரினங்கள் யாவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்பது மூத்தோர் வாக்கு. இப்படி உயிரினமே அழிந்து போனபின்னாலும் அழியாமல் வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப் படாமல் இருப்பது இரக்க உணர்வு மட்டுமே என்கிறார் வள்ளுவர். இது எப்படி சாத்தியமாகும் என்று காணலாம். முதலில் இரக்கம் என்பது ஒரு பொருள் அல்ல; ஒரு உணர்வே என்பதால் அதனை ஊழிவெள்ளம் அடித்துச் செல்ல இயலாது. இரண்டாவது இரக்கத்தின் மொத்த வடிவமாக என்றென்றும் விளங்கிக் கொண்டிருக்கும் பூமித்தாயை ஊழிவெள்ளமோ போரோ அழித்துவிடாது. ஆம், பூமியை விட இரக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை யாரால் சொல்ல இயலும்?. ' அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல் மாஞாலம் கரி.' என்று 245 ஆம் குறளில் பூமியின் இரக்க உணர்வினைப் பற்றியும் இரக்க உணர்வினால் பூமிக்கு ஒரு துன்பமும் நேராது என்றும் உறுதிபடக் கூறுகிறார் வள்ளுவர். எனவே மூன்றாம் குறளாகிய இங்கும் புகழ் என்பது இரக்க உணர்வினையே குறித்து நிற்கிறது என்று தெளியலாம்.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு - 'நிலமாகிய பூமிப்பரப்பில் எங்கும் இரக்கமே காட்டப்படுமானால் தேவர்கள் தாம் வாழும் உலகின் எல்லையைப் பேணமாட்டார்கள் அதாவது தம் உலகினை விடுத்து பூமியிலேயே வந்து வாழத் துவங்கிவிடுவார்கள்' என்பதே இக்குறளின் கருத்தாகும். மனிதர்கள் வாழும் பகுதியை பூமி என்றும் தேவர்கள் வாழும் பகுதியினை புத்தேள் உலகு என்றும் பிரித்துக் கூறும் வள்ளுவர் இந்த இரண்டு உலகிற்கும் உள்ள வேறுபாடு இரக்க உணர்வே என்கிறார். பூமியில் வாழும் உயிர்களிடத்தில் இரக்க உணர்வு குன்றும்போது தேவர்கள் தம் உலகிற்குச் சென்று விடுவர் என்றும் இரக்க உணர்வு பூமி எங்கும் மிக்கிருக்கும் போது தேவர்கள் மீண்டும் பூமிக்கு வந்து வாழத் துவங்குவர் என்றும் கூறுகிறார். இந்த தேவர்களின் வருகையினால் பூமியில் நல்ல மழையும் விளைச்சலும் உண்டாகி அனைத்து நல்ல வளங்களுடன் பூமி ஒரு சுவர்க்கம் போல் விளங்கும். இதிலிருந்து புகழ் என்னும் சொல் இங்கும் இரக்கத்தையே குறிக்கிறது என்பதை அறியலாம்.

நத்தம்போல் கோடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது - இக் குறளின் பொருளை ஏற்கெனவே நாம் திருத்தம் வலைப்பூவில் கண்டிருக்கிறோம். 'நத்தையின் சங்கினைப் போல புகழுடம்பினை விட்டுச் செல்லும் இறப்பும் வித்தகர்களுக்கே அன்றி மற்றவர்களுக்கு அரிதாகும்' என்பதே இக்குறளின் பொருளாகும். இங்கே வித்தகர்கள் என்போர் இரக்கம் மீதோங்கிய வள்ளல்கள் ஆவர். வித்தகர் என்றால் வித்தினை அகத்தில் உடையவர் என்று பொருள். இங்கே வித்து என்னும் சொல் விந்து என்னும் சொல்லின் வலித்தல் விகாரமாகும். விந்து என்னும் சொல் முதல் நிலையில் நீர் மற்றும் நீர் போன்ற பசைத் திரவத்தைக் குறிக்கும். இரண்டாம் நிலையில் ஈரப்பசையைக் குறிக்கும். இதுவே பொருள் விரிவாக்கமாக நெஞ்சின் ஈரமாகிய இரக்கத்தைக் குறிக்கும். வித்தகர் என்னும் சொல்லில் வரும் வித்து என்பது இங்கே இரக்கப் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன் - 'வாழும்காலத்தில் பிறர்மேல் இரக்கம் காட்டாமல் இகழ்ச்சியுடன் வாழ்ந்தவர்கள் தம்மால் இயலாத காலத்தில் தன் மீது இரக்கம் கொண்டு உதவவில்லையே என்று பிறரை நொந்துகொள்வது ஏன்?.' என்பதே இக்குறளின் பொருளாகும். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்னும் முதுமொழியின் அடிப்படையில் எழுந்ததே இக் குறள் ஆகும். உடல் நலத்துடன் இருக்கும்போதே துன்புறுவோரிடத்தில் இரக்கம் காட்டி உதவுங்கள்; இகழ்ந்து செல்லாதீர்கள். அவ்வாறு சென்றால் நீங்கள் துன்புறும்போது உங்கள் மீது இரக்கம் காட்டி உதவிசெய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார் வள்ளுவர். இங்கும் புகழ் என்பது இரக்க உணர்வினையே குறிக்கிறது.


வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும் எச்சம் பெறாவிடின் - வாழும் காலத்தில் இரக்கசீலர் என்னும் நற்பெயரைப் பெறாவிட்டால் அரசர்களும் செல்வந்தர்களும் பெரும்பழியே அடைவர் என்பதே இக்குறளின் கருத்தாகும். இக் குறளில் வரும் வையம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. அவற்றில் ஒன்று தேர் ஆகும். வையத்தார் என்பது தேரினை உடையவர்கள் என்ற பொருளில் அரசர்களையும் பெரும் செல்வந்தர்களையும் இங்கே குறிக்கப் பயன்பட்டது. செல்வத்துப் பயனே ஈதல் என்பதால் பெரும் செல்வம் படைத்த அரசர்களும் செல்வந்தர்களும் தம்மிடம் உள்ள செல்வத்தை இல்லாத வறியவர்களுக்குக் கொடுத்து உதவி இரக்கசீலர் என்னும் நற்பெயரை சம்பாதித்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாமல் வாழ்ந்தால் அவர்களது வாழ்க்கை பழியுடைய ஒரு பாவ வாழ்க்கையாகவே அமைந்துவிடும் என்று கூறுகிறார் வள்ளுவர். இங்கும் இசை என்பது இரக்கத்தைக் குறித்தே நிற்கிறது.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் - இரக்கமில்லாத மக்களைத் தாங்கிய நிலம் தீங்கில்லாத பல்வேறு வளங்களை மென்மெல இழக்கும் என்பதே இதன் பொருளாகும். நெஞ்சின் ஈரமாகிய இரக்கம் குறையக்குறைய மண்ணின் ஈரமும் குறைந்து வறண்டு போகிறது. இதனால் மரங்களின் இலைகள் ஈரப்பசை இன்றி வற்றி உதிர்ந்துவிடும். மரங்களில் இலைகள் இன்மையால் மழையும் பெய்யாது; மழையின்மையால் மண்ணில் இருந்த அனைத்து வளங்களும் மெல்லமெல்ல அழியத் துவங்கும். இது எவ்வாறு உண்மை எனில் இரக்கம் இல்லாத கொடிய மக்கள் பொதுநலமற்ற சுயநலக் காரர்கள் என்பதால் இருக்கும் நீர்நிலைகளைக் காத்தல், புதிய நீர்நிலைகளை அமைத்தல் முதலான பொதுநலப் பணிகளில் ஈடுபட மாட்டார்கள். தமது தேவைக்கேற்ப மண்ணைத் தோண்டி நீரை எடுத்துக் கொள்வதால் நீர்வளம் குறைந்து மண்ணின் ஈரமும் குறையத் துவங்குகிறது. இதை நாம் இன்றைய காலகட்டத்தில் கண்கூடாகவே பார்க்கிறோம். இதைத் தான் வள்ளுவர் அக்காலத்திலேயே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். இங்கும் இசை என்பது இரக்கத்தையே குறிப்பதை அறிக.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர் - இரக்கம் இல்லாமல் வாழும் மனிதர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர்; இரக்கமுடைய மனிதர்கள் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படுவர் என்பதே இக்குறளின் பொருளாகும். இரக்கம் இல்லாதவர்களை இந்த உலகம் மனிதர்களாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்பதே இதன் உள்ளுறைப் பொருளாகும். இரக்க உணர்வே ஒரு ஆறறிவு படைத்த மனிதனை ஐந்தறிவு படைத்த விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது ஆகும். இரக்க உணர்வு இல்லாதவர்கள் உருவத்தால் மனிதராக இருந்தபோதும் விலங்குகளாகவே கருதப்படுவர். இதில் இருந்து விலங்குகளுக்கும் மனிதருக்கும் இருக்கும் வேறுபாடாகிய ஆறாவது அறிவு என்பது இரக்க உணர்வே என்பதை அறியலாம். இங்கும் இசை என்பது இரக்கத்தையே குறித்து நிற்கிறது.

மேற்கண்ட குறள் விளக்கங்களில் இருந்து புகழ், இசை, வித்து ஆகிய மூன்று சொற்களும் இரக்கப் பொருளில் தான் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதைத் தெள்ளிதின் அறியலாம். புகழ் என்ற சொல் நான்கு குறள்களிலும் இசை என்ற சொல் நான்கு குறள்களிலும் வித்து என்ற சொல் ஒரு குறளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. தற்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள குறளில் புகழ் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது. இக் குறளிலும் 'புகழ்' என்ற சொல்லுக்கு 'இரக்கம்' என்ற பொருளைக் கொண்டு அதன் விளக்கம் காணலாம்.


' (இவ் உலகில்) உயிர்கள் பிறப்பதானால் (நெஞ்சில்) இரக்கத்துடன் பிறக்கட்டும்; இரக்கம் இல்லாத உயிர்கள் பிறப்பதைவிட பிறவாதிருப்பதே நல்லது.'



சரி, வள்ளுவர் ஏன் இவ்வாறு கூறவேண்டும்?. ஆராய்ந்து பார்த்ததில் ஓர் உண்மை புலப்பட்டது. இரக்கம் என்பது ஒரு குலப்பண்பு ஆகும் அதாவது மரபு சார்ந்த பண்பு ஆகும். ஈவும் இரக்கமும் உடைய தயாள சிந்தனை கொண்டவர்களின் வழித்தோன்றல்கள் யாவரும் நெஞ்சில் இரக்கத்துடன் இருப்பர். இரக்கமற்ற கல்நெஞ்சர்களின் மக்கள் யாவரும் கல்நெஞ்சர்களாகவே இருப்பர். இது நடைமுறை உண்மை. இப்படி இரக்கம் இல்லாதவர்களின் மக்கள் இம் மண்ணில் பிறந்து வாழ்ந்தால் என்ன ஆகும்?. முன்னர் குறளில் கண்டபடி, இப் பூமி தனது நல்ல பல வளங்களை இழக்கும்; இதனால் இரக்கமுடைய மனிதர்களின் வாழ்வும் அல்லவா பாதிக்கப்படும்?. எனவே தான் இரக்கமற்றவர்களின் மக்கள் இம் மண்ணில் பிறப்பதைவிட பிறவாதிருப்பதே நல்லது என்கிறார் வள்ளுவர். அதேசமயம் இரக்கமுடையவர்களின் மக்கள் இம் மண்ணில் பிறந்து வாழ்ந்தால் முன்னர் குறளில் கண்டபடி இப் பூமியே ஒரு சுவர்க்கம் போல ஆகிவிடும் நன்மையும் இருக்கிறது. எனவே தான் இவ் உலகில் உயிர்கள் பிறப்பதானால் இரக்கத்துடனே பிறக்கட்டும் என்கிறார். இதை வள்ளுவரின் விருப்பமாக மட்டுமல்ல இறைவனை நோக்கி அவர் வேண்டிக் கொள்வதாகவும் கருதலாம்.

முடிவுரை:

நாம் மேலே கண்டபடி புகழ் என்னும் சொல் முதல்நிலையில் இரக்கத்தை மட்டுமே குறித்து வந்தது. 'புகழ்பாடுதல்' என்பது 'இரக்க உணர்வினை விரித்துக் கூறுதல்' என்ற பொருளில் தான் முதலில் கையாளப்பட்டது. சங்க கால ஆற்றுப்படை நூல்கள் யாவும் அரசர்களின் கொடைத்திறனையே விரிவாகக் கூறுவது இதற்கு ஒரு சான்றாகும். காலப்போக்கில் இச்சொல் அரசர்களின் இரக்க உணர்வினை மட்டுமின்றி வீர உணர்வினையும் காதல் உணர்வினையும் விரித்துக் கூறப் பயன்படலாயிற்று. இன்று இச்சொல் ஒருவரது கொடை, வீரம், காதல் முதலான சிறப்புப் பண்புகள் (பெருமைகள்) அனைத்தையும் விரித்துக் கூறப் பயன்படுகிறது. இது இச் சொல்லின் இரண்டாம் நிலைப் பொருளாகும். வள்ளுவர் இச் சொல்லை இந்த அதிகாரத்தில் முதல்நிலைப் பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிக.

Wednesday, May 27, 2009

அம்மியும் அடியும்


பழமொழி:

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.

தற்போதைய பொருள்:

அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லைக் கூட நகர்த்த முடியும்.

தவறு:

அம்மிக்கல்லை அக்கால இல்லத்தரசிகளின் கைஅரைப்பான் என்றே கூறலாம். உணவுப் பொருட்களை சிறிய அளவில் அரைப்பதற்கென்று மின்னூறி(மிக்ஸி) வந்துவிட்ட இந்தக் காலத்தில் அம்மிக்கல்லைப் பார்ப்பதே அரிதாய் இருக்கின்றது. பழைய வீடுகளில் எல்லாம் இந்த அம்மிக்கல்லானது வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையில் கருப்பு ஆடு போல படுத்திருக்கும். இது மட்டும் தனியாக இருக்காமல் துணைக்கு ஒரு குழவிக் கல்லையும் சேர்த்துக்கொண்டு தனது தலைக்குமேலே அதனைப் படுக்க வைத்திருக்கும். ஒரு அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும். இந்த நாற்பது கிலோ எடையுள்ள ஒரு அம்மிக்கல்லை நகர்த்திவைக்க ஏன் அதனை அடியோ அடி என்று அடிக்க வேண்டும்?. இரண்டு கைகளால் நன்கு அழுத்தித் தள்ளினால் போதும்; நகர்ந்துவிடும். முடியாதவர்கள் ஒரு கடப்பாரையால் கீழிருந்து நெம்பினால் போதும்; நகர்ந்துவிடும். அதுவும் முடியாதவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்!.

இப்படிப் பல வழிகள் இருக்க ஏன் அம்மிக்கல்லை அடித்துப் படாதபாடு படுத்தவேண்டும்?. ஏற்கெனவே அடிமேல் அடி வாங்கித் தான் அது நம் வீட்டுக்கே வந்திருக்கிறது. ஆம், ஒரு அம்மிக்கல் சரியான வடிவம் பெறும்வரை ஆசாரியின் உளியால் எவ்வளவு அடிகளைப் பெறுகிறது என்பதை நாம் அறிவோம். இந் நிலையில் மேலும் பல அடிகள் அதற்குத் தேவையா?. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து அந்த அம்மிக்கல் உடைந்துவிட்டால்?. முதலுக்கே மோசம் அல்லவா ஆகிவிடும்!. நடைமுறை உண்மையும் அது தானே. நகர்த்துகிறேன் பேர்வழி என்று ஒரு அம்மிக்கல்லை அடியோ அடி என்று அடித்துப் பாருங்கள். இறுதியில் அது உடைந்தே போய்விடும். எனவே அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்று பொருள் கூறும் இப்பழமொழி தவறு என்பது தெளிவாகிறது. இந்தத் தவறான பொருளுக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் 'நகரும்' என்ற சொல்லில் உள்ள ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப் பற்றிக் கீழே காணலாம்.  

திருத்தம்:

'நகரும்' என்ற சொல்லிற்குப் பதிலாகத் 'தகரும்' என்று வரவேண்டும். இதுவே இப் பழமொழியின் திருத்தமாகும். தகரும் என்றால் 'உடையும், சிதறும்' என்று பொருள்படும்.

நிறுவுதல்:

'முயன்றால் முடியாதது எதுவுமில்லை' என்னும் உண்மையினை உணர்த்த வந்த அருமையான பழமொழியே இது. நம்மில் பலரும் பல பல குறிக்கோள்களுடன் நாள்தோறும் நன்கு உழைக்கத் தான் செய்கிறோம். ஆனால் வெற்றி எல்லோரையுமா அரவணைக்கிறது?. இல்லையே. அன்றியும் வெற்றி ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதுமில்லை. எனவே வெற்றிக் கனியைச் சுவைக்க நாள்தோறும் கடினமாக உழைக்கத் தான் வேண்டும். ஆனால் எதுவரை?. நாம் எண்ணிய செயல்கள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிட்டும் வரை. சிலமுறை முயன்று தோல்விகளைத் தழுவியவர்கள் கூறும் வார்த்தை இது தான்: 'என்னால் முடியவில்லை; எனக்கு அது கிடைக்காது.' இது தவறான கருத்தாகும். ஏனென்றால் முடியும் என்று முழுமூச்சுடன் நம்பி தொடர்ந்து செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை. கிடைக்காதது எதுவுமில்லை. இதனால் தான் திருவள்ளுவரும் 'முயற்சி திருவினை ஆக்கும்' என்று கூறுகிறார். இங்கே வள்ளுவர் கூறும் முயற்சி என்பது விடாமுயற்சியே ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இதுதான்: 'என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சியுமே எனது வெற்றிக்கான காரணங்கள்.' 

விடாமுயற்சியும் கடினஉழைப்பும் இருந்தால் அரிய செயல்களைக் கூட நம்மால் செய்துமுடிக்க இயலும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விடாமுயற்சி என்னும் அடிமேல் அடி வைத்தால் உடையாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கடினமான அம்மிக்கல் போன்ற அரிய செயல்கள் கூட நிறைவேறும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும்.

இளைய தலைமுறையினருக்கு வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள இப் பழமொழியின் உண்மையான பொருள் இது தான்: 'அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லும் உடைந்துசிதறும்.' இப் பழமொழியில் வரும் 'அம்மிக்கல்' என்பது அரிய செயலையும் 'அடிமேல் அடி வைத்தல்' என்பது விடாமுயற்சியினையும் உருவகமாகக் குறித்து நிற்கின்றன.

சரியான பழமொழி:

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் கரும்.


............................வாழ்க தமிழ்!..................................